மூன்று வியப்புகள்!!!

1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!


கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை! குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது! கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை! வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன! பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள்! ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்!


வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்! குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம்! பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும்! மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள்! கூட்டமே இருக்காது! படுத்துக் கொண்டு போகலாம்! மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்!

எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி!?

முதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை! பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று! அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர்! அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண்! செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி! தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி! பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர்! திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்!.

அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின! மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்!

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா? இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை! அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள்! வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள்! 


வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள்! புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள்! சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள்! கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும்! இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும்! ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம்! நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும்! உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்!

பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!

(தொடரும்)

பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!


அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!
சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்! மீண்டும் எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுத முடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது! அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீ ரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.


என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்!

இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது!


ஹாஜி த. அ. அப்துல் ரசாக்

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

எம் சிந்தையைக் கவர்ந்த

கல்வித் தந்தை!


சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,


சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!


உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;


உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!


சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;

நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;

வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;

மசியா மனிதரை மசிய வைப்பார்!


திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்

குட்டினால் அனுபவம்! இவைகளின்

சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்

சொந்தக்காலில் நின்ற செயலாளர்!


மடிக் கணினி வரு முன்னரே

மடியில் வைத்துத் தட்டச்சில்,

பணி ஆணைகள் பல அச்சிட்டு,

படித்தோர்க்குப் பலன் தந்தார்.


ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்

ஆளுமையில் அடங்கும் துறைகள்;

கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்

மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!


வாசகமொன்று இவர் எழுதிடின்,

வக்கணை பேச யாருளர்? பிறர்

வாசகத்தை இவர் திருத்திடின்,

வாய்திறந்து மறுப்போர் யாருளர்?


அலுவலகங்களுக்கு ஓர் உடை,

விழாக்களுக்கு என்று ஓர்உடை,

பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை

என்ற வழக்கம் உடையாரல்லர்!


யாவும் உடையார்க்கு உயருடையா?

பயமே அறியார்க்குப் படை பலமா?

தளரா நடையே போதும் அவருக்கு,

அடையா இலக்கை அடைவதற்கு!


நீட்டோலை வாசியா நின்றவரை,

ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!

படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,

பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.


பட்டறிவில்லா எம் போன்றோரை,

பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!

அறிவுரைகளால் அதட்டி என்னை

முது கலையை அடைய வைத்தார்!


ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;

ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்

பதவி நெருங்கும் வரை அவர்

அன்பில் எம் முயர்வு இருந்தது!


பரவட்டும் தாளாளர் புகழொளி

பாரெல்லாம்! வல்ல இறைவன்,

புவனப் பதவி பல தந்தவருக்கு

சுவனப் பதவியை வழங்கட்டும்!


A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)

முன்னாள் மாணவர், முது கலைப்

பட்டதாரி ஆசிரியர்,

காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி

powered by Blogger