வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4




உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.

சத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது.

உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது அவர்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

உமரின் பணியகம் மதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

உமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

தொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)

சுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர் போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. 'போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ? பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே' என்று உமர் எண்ணினார்.

அவர் உமரை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று." என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். உமர், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி (விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய உமருக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

முதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும். மனிதம் மாய்ந்துவிடவில்லை!.

தொடரும்....

0 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4"

powered by Blogger