மூன்று வியப்புகள்!!! பகுதி - 3


1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். 

இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன்! இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும்  இல்லை; தண்டித்ததும் இல்லை! “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்!” என்று மட்டும் சொல்வார்!

நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார்! அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது! யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்!



அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்?” என்று வியப்பார்கள்! ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே! ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை! அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது!

“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்லரிதல் வேந்தன் தொழில்”

என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார்! ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்!

1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன்! அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .

மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.

நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்!முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்? “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.

அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்!



பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.

மூன்று வியப்புகள்!!! - பகுதி - 2


பகுதி - 2

பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!  

காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி!

மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’  என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது! “இதுவா கல்லூரி?” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது! அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது! கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின!

முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான்,  கல்வித் தந்தை S.M.S.  ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.


அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்! அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது! அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள்  பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள்! வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள்! அப்படிச் சேர்ந்த  மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது!

நான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே! ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே! மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி!

வேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு! வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள்! கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு!

எவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை! பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை!

அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார்! அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள்! பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற  வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று!


கல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை! ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார்! ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்! 




பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.

powered by Blogger