வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 10


உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார். எனவே உடன் வரும் பொருள்கள் அதிகம் இருந்தன. அவற்றை அங்குமிங்கும் நகர்த்துவது கடினமாக இருந்தது. ஒருவாறாக அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அவர்கள் பயணித்தது ஏர் இந்தியா ஜம்போ ஜெட் (Boeing 747) விமானம். அவர்கள் சென்னை வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி ஊர் வர வேண்டும். உமர் ஏர்ப்போர்டிலிருந்து போன் செய்தார். பயணத்திற்கான எல்லா நடை முறைகளும் நல்லபடியாக முடிந்ததாகச் சொன்னார். அவர்கள் மூவரும் புறப்பட்ட செய்தியை வீட்டுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துவிட்டோம். அடுத்து நாங்கள் சென்னையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் நலமாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்ற நல்ல செய்தியை. எதிர்பர்த்திருந்தபடியே ஊர் வந்து சேர்ந்த செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. அடுத்து நாங்கள் எங்கள் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தோம். நாட்கள் உருண்டோடின! ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துபாய் விமான நிலையத்தில் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு வழக்கமான எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு, அனுமதிச் சீட்டும் பெற்று அவரவர் இடத்தில் அமர்ந்துவிட்டார்கள். விமானத்தில் முதலில் எல்லாருக்கும் ஜூஸ் வழங்கினார்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் உணவு பரிமாறப்பட்டது. உமர் தேர்ந்தெடுத்தது வழக்கத்துக்கு மாறாக அசைவ உணவை! பொதுவாக அவர் சைவ உணவைத்தான் தேர்ந்தெடுப்பார். என்ன காரணமோ இந்த முறை அசைவத்துக்கு இசைந்து விட்டார். இதற்குப் பின் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறானே!

அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் தொண்டையை ஏதோ அடைத்தது. எலும்புடன் கூடிய ஒரு கறித்துண்டு அவர் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியில் எடுக்க முடியவில்லை. தண்ணீர் குடித்துப் பார்த்தார்; நடந்து பார்த்தார்; வேறு சில முயற்சிகளும் செய்துபார்த்தார். எதற்கும் அந்த இறைச்சித் துண்டு அசையவில்லை. அசைவமல்லவா? தொண்டையிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. எங்கள் சகோதரி மகன் பயந்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலியும் வந்துவிட்டது’ விமானத்திலிருந்த மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டார். அப்படியெல்லாம் தனக்கு இல்லை என்று உமரே சொன்னார், விமானப் பணியாளர்கள் பதறிப்போய் விட்டார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை.

பயணிகள் யாரும் தங்கள் இடத்தில் அமரவே இல்லை. எல்லாரும் உமரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பறந்து கொண்டிருந்த பறவைக் கப்பலே பரபரப்பாகக் காணப்பட்டது.

இந்த விமானத்தில் எங்கள் ஊரைச்சார்ந்த M.S.நிஜாமுதீன் என்பார் உமர்தம்பிக்கும் அவரது குடும்பத்துக்கும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். M.S.நிஜாமுதீன், இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், ஜனாப் M.S.தாஜுதீன் அவர்களின் தம்பி ஆவார். இவரும் துபாயில் முக்கிய பதவியை வகிக்கிறார். M.S.தாஜுதீன் அவர்கள் உமரை முன்பே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் பேசிப் பழக்கமில்லை. நிஜாமுதீனும் அவ்வாறே! நிஜாமுதீனிடம் இருந்த அனுபவமும் சுறுசுறுப்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கை கொடுத்தன.

அவர் விமான அதிகாரிகளிடம் சென்று விமானத்தை துபைக்கே திருப்பிவிட முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் “குறிப்பிட்ட எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தால் விமானத்தை துபைக்குத் திருப்பிவிடலாம். நீண்ட தூரம் கடந்து வந்துவிட்டோம்! இப்போது நாங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிட்டோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது. சென்னையை அடைகிற வரை நீங்கள் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொளுங்கள். நாங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறோம். சென்னை விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்துவிடுகிறோம்” என்றார்கள்.

உமருடன் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஓரளவு சென்னையை நெருங்கி விட்டனர். சென்னை விமான நிலையத்திற்குத் தகவல் முன்பே தரப்பட்டுவிட்டது. விமானம் சென்னையை வந்து அடைந்தது. அப்போது நேரம் இரவு மணி ஒன்று! விமானப் பணியாளர்கள் சுங்க வேலைகளை ஒழுங்காக முடித்துக் கொடுத்தனர். உமரை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளி வந்து உறவினரிடம் ஒப்படைத்தனர். பெற்றோரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மகன்கள், தந்தை இந்த நிலையில் வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. மூத்த பையன் இந்த சோகத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தன் பெற்றோர் நலமாக வந்து சேர்ந்தார்கள் என்று என்னிடம் போனில் சொல்லியிருந்திருக்கிறான்.

பொருள்கள் அதிகம் இருந்தன. சுங்க அதிகாரிகள் அவர்களை உடனே வெளியே அனுப்பிவிட்டதால் பணியின் பளு சற்றுக் குறைந்தது. உமர்தம்பியை அருகிலுள்ள வடபழனி மருத்துவ மனைக்கு ஏர் இந்தியா நிறுவனமே தன் வாகனத்தில் அனுப்பிவைத்தது. ஏர்போர்ட்டுக்கு வெளியே பொருள்களுடன் எங்கள் சகோதரி மகன் சாதலியும் உமரின் மனைவியும் காத்துக் கொண்டிருந்தனர்.

இரவு மணி 1:30 இருக்கும். உமர்தம்பியைக் கூட்டிக்கொண்டு வடபழனி சென்றார்கள். அங்கே ஒரு தனியார் மருத்துவமனையில் இரவில் நுழைய அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மற்றொரு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார்கள். அங்கும் அதே பதில்! மருத்துவர் சொன்னார், ”சோதித்துப் பார்க்கக்கூடிய கருவி வசதிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அவர் நெஞ்சு வலிப்பதாகச் சொல்வதால், ஒரு ஊசியைப் போட்டு உறங்க வைத்துவிடலாம். மற்றவைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். கூடச் சென்றவர்களும் சம்மதித்தனர்.

உமர் சற்று படுத்தார். அப்போதும் வலி இருந்தது. சிறிது நேரத்தில் உறக்கம் அவரை ஆட்கொண்டது! உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென்று இருமல் வந்தது. வராமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த கறித் துண்டு வாய் வழியாக வெளியில் வந்து விழுந்தது! இறைவனுக்கே எல்லாப்புகழும்! விடிந்ததும் மருத்துவ மனையிலிருந்து விடுபட்டு ஓட்டல் அறைக்குச் சென்றனர்.

அன்று மாலையே உமர்தம்பி அவர் மனைவி, மகன்கள் மற்றும் மருமகன் சாதலியும் சென்னையிலிருந்து புறப்பட்டு மறு நாள் காலையில் அதிரை வந்து சேர்ந்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

0 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 10"

powered by Blogger