வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12



... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.

உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச் சென்ற நான், அன்று இருந்த அரபு நாட்டுப் பயண அலையால் உந்தப்பட்டு துபாய் வந்ததையும், அடுத்த ஆறு மாதத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் எங்கள் குடும்பத்தின் தூணாக விளங்கிய, எங்கள் மரியாதைக்குரிய மச்சான் (சகோதரி கணவர்) S.M. முஹம்மது பாரூக் அவர்கள் திடீரென இறந்து போனதையும், அதனால் எங்கள் குடும்பம் தடுமாறியதையும், இப்போது அவர்களின் குடும்பத்தின் சுமை என் மீதும் உமர் மீதும் விழுந்ததையும், பட்டுக்கோட்டையில் சுதந்திரமாக இருந்த உமரை துபைக்கு வரவழைத்ததையும், கராமா கிளையில் உமர் தனி மனிதனாகப் பணி புரிந்ததையும், உமர் அஃல்பத்தைமுக்கு மாறும் வரை, நான் சத்வாவிலிருந்து மாலையில் கராமா வந்து உமரையும் கூட்டிக்கொண்டு டாக்சியிலும் படகிலும் சென்றதையும், உமர் அமீரகம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குள், வயதான எங்கள் தாய் தந்தையரை மீண்டும் பார்க்க முடியாமல் போனதையும், இந்தக் காலக் கட்டத்தில் பிரமச்சாரி அறையில் தங்கி இருந்ததையும், அதனால் உமர் அடைந்த கசப்பான அனுபவங்களையும் மன உளைச்சல்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.

உமர் அல்ஃபத்தைமில் பணியில் சேர்ந்து, குடும்ப விசா கிடைத்தும் அந்த நேரத்தில் இந்தியாவில் நிலவிய கெடுபிடி காரணமாக குடும்பம் வர ஓர் ஆண்டு தள்ளிப் போனதையும், திடீரென்று உமர் அபுதாபிக்கு மாற்றப் பட்டதையும், உமர் வாரம் ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக துபாய் வந்து சென்றதையும், குடும்பம் வந்த பிறகு ஒவ்வொரு வியாழனும் நான் அபுதாபி சென்று விடுவதையும், எனக்குக் கதவு திறந்து விடுவதற்காக சிறுவர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவதையும், சனிக்கிழமை காலை அபுதாபியிலிருந்து நான் என் துபாய் அலுவலகத்திற்குச் செல்லும்போது, உமரின் இரண்டாவது மகன் என்னை அண்ணாந்து பார்த்து, தன் இனிய மெல்லிய குரலில் ”பெரியப்பா! வரும் வியாழக்கிழமை வருவீர்களா?” என்று கேட்டு என்னை வழி அனுப்பி வைப்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

உமர் துபாய்க்கு மாற்றப்பட்டதும் பையன்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், துள்ளளையும், தனிமை நோயால் வாடிக் கொண்டிருந்த உமரின் மனைவிக்கு மனத் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதையும், எங்கள் சகோதரிகளின் மக்கள் வருகையால் உமர் குடும்பம் மேலும் குதூகலத்தை அடைந்ததையும், அமீரகத்திலிருந்து நானும் உமரும் குடும்பத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்றியதையும் அசைபோட்டுபார்க்கிறேன்!

“அட! இது என்ன புகையும் நெருப்பும்? கட்டிடமல்லவா எரிந்துகொண்டிருகிறது!” – ஓர் அலறல்! நான் திடுக்கிட்டேன்! எனது எண்ண அலைகள் சிதறிவிட்டன! “இங்கே வந்து பாருங்கள்! அமெரிக்காவின் வணிக வளாகத்தை! இரட்டைக் கோபுரங்களில் ஒன்று சரிந்துவிட்டது!” என்று உமர் கத்தினார், தன்னை மறந்து! இப்போது உமரோடு சேர்ந்து நானும் தொலைக் காட்சியைப் பார்த்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு விமானம் மற்றொரு கோபுரத்தின்மீது மோதியது! புகையும் நெருப்பும் கறுப்பும் சிவப்புமாகத் தெரிந்தன! கறுப்பு-சிவப்பு என்றாலே கஷ்டமும் நஷ்டமும் தானா? நான்கு நாட்களுக்கு நிம்மதியாக, சுதந்திர மனிதர்களாக இருக்கலாம் என்று எண்ணி இருந்த எங்களுக்கு மேலும் சோதனைகள்! 15- ஆம் தேதிக்கு டிக்கட் முடிவாகவில்லை. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டன! எங்கள் பயணம் தள்ளிப் போடப்பட்டு விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம்!

நல்ல வேலை, டிக்கட் தேதி உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்டபடி செப்டம்பர் 15-ல் புறப்பட்டோம். இந்த முறை எங்களிடம் பொருள்கள் அதிகம் இல்லை. விசாவை ரத்து செய்துவிட்டு வருவதால் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற்று எங்கள் நிறுன ஊழியரிடம் தர வேண்டும். நானும் உமரும் ஒரே ஜன்னல் வழியாகப் பாஸ்போர்டைக் கொடுத்தோம். தந்தை பெயர், ஊர் பெயர் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதிகாரி எங்களை ஏற, இறங்கப் பார்த்தார்! புத்திசாலி! புன்முறுவல் பூத்தார்! நாங்கள் முத்திரை பெற்ற தாள்களை எங்கள் நிறுவனங்களின் நபர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.

அனுமதிச் சீட்டு பெற்று விமானத்தில் ஏறினோம். எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். உமர்தம்பிக்கு சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்து என்பதை எனக்கு மீண்டும் விளக்கினார். ஊரிலிருந்து அதே ஜம்போஜெட் ஏர்இந்தியா விமானத்தில் உமர் துபாய் வந்தபோது விமானப் பணிப் பெண்கள் அவரிடம் நலம் விசாரித்ததையும் சொன்னார். எதையும் விடாமல் ஒப்புவிக்கும் பழக்கம் உமரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே ஒரு செய்தியை என்னிடம் விளக்கி முடித்தால்தான் அவர் ஆறுதல் அடைவார். “நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ, ‘ஊம்! அப்படியா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்” என்பார்.

விமானம் தொடர்பான அத்துணை செய்திகளையும் உமர் அறிந்து வைத்திருந்தார். என்ன என்ன வகையான விமானங்கள் இருக்கின்றன்; அவைகளின் அமைப்பு எப்படி; எவை பாதுகாப்பானவை; எவை ஆபத்தானவை; என்றெல்லாம் அறிந்து வைத்திருந்தார். தான் ஏறி அமர்ந்திருக்கும் விமானம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருப்பார். விமானம், எப்படி வடிவமைக்க பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பார்! இரண்டு மூன்று முறை நான் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். ஒரு முறை அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் கேட்டார், “நாம் இப்போது. பயணம் செய்துகொண்டிருப்பது என்ன வகை விமானம் தெரியுமா? DC10 !” DC10 விமானம் பற்றி உமர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வெற்றிகரமான விமானம் அல்ல! எங்காவது விமான விபத்து நடந்தால், “அது DC10 ஆக இருக்கவேண்டுமே” என்பார் உமர். அவர் சொன்னது சரியாக இருக்கும்! எங்கள் விமானமும் இந்த வகைதான் என்று அறிந்ததும் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன், ’தம்பி உள்ளான் இ(எ)தற்கும் அஞ்சான்’ என்று!

DC-10 என்ற விமானம் McDonnell Douglas என்ற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது மூன்று இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானமாகும். அதிகப்பட்சம் 380 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது! 1968 முதல் 1988 வரை DC-10 வகையில் 446 விமானங்கள் தயாரிக்கப்பட்டு, விமானக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டன. DC-10 அதிக அளவில் பயன்படுத்துவது FEDEX சரக்குகள் விமானப் பணிக்காகத்தான். இப்பொழுதெல்லாம் அநேகமாகப் பயணிகள் போக்குவரத்துக்கு DC-10 பயன்படுத்தப் படுவதில்லை. இவ்வகையான விமானம் 19 முறை விபத்திற்குள்ளாகி இருக்கின்றன!

ஒரு முறை உமர் சிங்கப்பூர் வழியாக ஊர் சென்றார். பயணம் செய்த விமானம் Dc 10 வகை! இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் பதிவாகிவிட்டது! தொழுகை நேரம் வந்ததும் விமானத்தின் பின் பகுதிக்குச் சென்று அங்கே தொழுதார். அப்போது விமானம் ஆடியது. உமர் ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று பயந்துவிட்டார்! சற்று நேரத்தில் ஆட்டம் நின்றுவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருவரும் தொழுகை நேரம் வந்ததும் முன் பகுதிக்குச் சென்று தொழுது இருக்கிறோம். இறைவனை நினைக்கும் சரியான நேரமும் இடமும் அதுதானே! இறைவனிடமே தன்னை ஒப்படைத்துவிட்ட ஒருவருக்கு திடீர் விபத்து, உடனடி வெகுமதி! புவனம் கை விட்டுப்போனால், சுவனம் கை நீட்டி அழைக்கும்! இன்ஷா அல்லாஹ்!

இறைவனருளால் வானூர்தியில் சென்னை வந்து, புகைவண்டியில் ஊர்ந்து ஊர் வந்து சேர்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

... தொடரும்

0 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12"

powered by Blogger