வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5




ஹஜ் பயணம்

உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்வது எளிது. அந்தக்கடமையை செய்துவிடுமாறு அடிக்கடி கூறுவர்.

உமர் என்னை ஹஜ் செய்துவரும்படி வற்புறுத்தினார். பொருள் ஈட்ட வந்த இடத்தில் ஹஜ் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியவர் உமர்தான். அந்த நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு. நான் விமானம் மூலம் சென்று வந்தேன். ஆனால் உமர் தேர்ந்தெடுத்ததோ பஸ் பயணம்!


ஹஜ் சீசனில் ஹஜ்ஜுக்கு பஸ் மூலமாக அழைத்துச் செல்வதை சிலர் தொழிலாகவே துபாயில் நடத்தி வந்தனர். செலவு குறைவு; மிகவும் துன்பத்துக்குள்ளாக நேரிடும். இது உமருக்கு நன்கு தெரியும். மனைவியுடன் பஸ் மூலமாகப் போய் வர முடிவெடுத்தார். பஸ் பயணம் ஒத்து வருமா என்பது எங்கள் கவலை. உமர்தம்பி இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார். துன்பங்களை எதிர் நோக்க முன்பே ஆயத்தமாகிவிட்டதால் அவற்றைத் தாங்கிக்கொண்டார்.

சாலை எங்கும் போக்கு வரத்து நெரிசல். இடையிடையே சோதனைச் சாவடிகள் பொறுமையைச் சாகடித்தன. வாகனங்கள் ஊர்ந்துதான் செல்லும். தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் தேவை; தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் வேலை செய்யாது! நினைத்தால் இறங்கி அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. பஸ் நிறுத்தப்படும் இடங்களில் மட்டும்தான் இறங்க முடியும். அதுவும் தொழுகை, உணவு நேரங்களில் மட்டும்தான்.

துபாயிலிருந்து பஸ் புறப்படுவதற்கு முன் பயணிகள் அவர்களது உடைமைகளுடன் சரியாக இருக்கின்றார்களா என்று பார்க்கும்போது ஒருவருடைய பாஸ்போர்ட் காணவில்லை. இதற்காக மணிக் கணக்கில் காக்க வைத்துவிட்டார்கள். இறுதி செய்யப்பட்ட குழுவில் ஒருவர் வராமல் இருந்தால்கூட பயணம் ரத்தாகிவிடும். புதிய நடைமுறைகள் மேற்கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒருவாறாக தவறவிட்டதாக சொல்லப்பட்ட பாஸ்போர்ட் கிடைத்த பின்னர்தான் பயணத்தைத் துவக்கினார்கள்.

வியாபார நோக்கத்தோடு ஏஜெண்டுகள் செய்கிற தில்லுமுல்லுகளை சொல்லி முடியாது. துபாயில் சொல்லி அழைத்துவந்த மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள். உமர்தம்பி சவூதியை அடைந்ததும் அவரவர், ஹோட்டலில் ஒதுக்கப்பட்டிருந்த இடங்ககளைப் பிடித்துக்கொண்டனர். உமர்தம்பிக்கும் அவர் மனைவிக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை. இரவு தங்க இடமில்லை. ஒரு நல்ல மனிதர் தன் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே உமர் கண்ட காட்சி அவரது கோபத்தைச் சீண்டியது. ஏஜென்ட் அங்கே வசதியாகத் தங்கியிருக்கிறார். அவர் உமரைப் பார்த்ததும், “மன்னித்துக் கொள்ளுங்கள். இரண்டு பேர் இடம் கேட்டுக் கெஞ்சினார்கள். உங்கள் இடத்தைக் கொடுத்துவிட்டேன். துபாயில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்” என்றார். பிறகு இடம் ஒதுக்கித்தந்தார்.

உமர்தம்பி ஹஜ் செய்யச் சென்றிருந்த ஆண்டு (ஏப்ரல் 1997) , இதற்கு முன்னரும் பின்னரும் நடந்திராத ஒரு நிகழ்ச்சி ஹஜ்ஜில் ஏற்பட்டது. மினாவில் ஹாஜிகள் தங்கயிருந்த கூடாரங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. கூடாரத்துக்குள் கேஸ் அடுப்புகளை வைத்து சமைத்துக் கொண்டிருக்கும்போது கவனக்குறைவால் தீப்பிடித்துவிட்டது. இத்தீ எல்லாக் கூடாரங்களிலும் பற்றிக்கொண்டது. சில கூடாரங்களை விட்டுவிட்டு சற்று தள்ளியிருந்த கூடாரங்களும் எரிந்தன. நல்ல வேளை; அந்த நேரத்தில் பலர் வெளியில் நின்றனர். தீப்பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்களும் ஓடி வந்துவிட்டார்கள்! வெளியே வர முடியாதவர்களில் காயமடைந்தவர்களை ஹாஜிகள் வெளியில் தூக்கி வந்தார்கள். அவர்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. சிலர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர் இவர்களில் சுமார் 150 பேர் இந்தியர்கள். இவர்கள் இந்த நெருப்பினால் நிச்சயமான நெருப்பிலிருந்து தப்பியவர்கள்! என்றும் வற்றாத ஜீவ நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத்தைச் சுவைக்கப் போகிரவர்கள்! இன்ஷா அல்லாஹ்.

மினாவுக்குச் செல்லும்போது ஹாஜிகள் பெரும்பாலான உடைமைகளை தாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலில்தான் வைத்துவிட்டுப் போவார்கள். மினாவுக்கு, தேவையான உடைகள் மற்றும் பணம் இவற்றைத்தான் எடுத்துச் செல்வார்கள். ஹாஜிகள் கூடாரத்தில் வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீயில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக சவூதி அரசும் இந்திய அரசும் முயற்சிகள் எடுத்துக்கொண்டன.

தொலைக் காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மனம் பதைத்தது. பலர் அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள் என்று கேள்விப்பட்டோம். தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு, “அல்லாஹ் உதவியால் பெற்றோருக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று சொல்லி துணிவு ஊட்டினோம். துபாயிலிருந்து சவூதிக்குத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டோம். “விவரம் சரியாகத் தெரியவில்லை; தெரிந்ததும் சொல்கிறோம்” என்றார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு உமரிடமிருந்தே போன் வந்தது. “நலமாக இருக்கிறோம். பொருள்கள் ஓட்டலில் இருக்கின்றன; கூடாரத்தில் இருந்த சில பொருள்கள் மட்டும் எரிந்துவிட்டன” என்றார்.

தீ விபத்தின் போது மக்கள் இங்குமங்கும் சிதறி ஓடியதால் ஹஜ் கடமையை பலரால் சரியாகச் செய்ய முடியவில்லை. சிலர் திருப்தியின்றி அடுத்த வருடங்களில் மீண்டும் ஹஜ் செய்ததாகக் கேள்வி! மினா விபத்திலிருந்து தப்பித்த உமர் தம்பதியர் அரபாத், முஜ்தலிபா கடமைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மினா திரும்பினர். இரண்டு நாட்கள் அங்கு தங்கி ஷைத்தானுக்குக் கல் எறிந்துவிட்டு, குர்பானி கொடுத்துவிட்டு, இறுதியாக தவாபைப் பூர்த்தி செய்துவிட்டு தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மதீனா சென்றனர். அங்கே ஒருவாரம் தங்கி, பள்ளியில் தொழுது, ஜியாரத்தும் செய்தனர். மீண்டும் பஸ் மூலமாகப் புறப்பட்டு துபை தேரா வந்து சேர்ந்தனர் ஹாஜிகள். அல்ஹம்துலில்லாஹ்!

0 Response to "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5"

powered by Blogger