ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்?

இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.
இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.
எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்க முன் வந்தனர். இந்த வேகத்தால் சாணக்கியர் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டமும் தோல்வியைத் தழுவியது.
கல்வி கற்பதற்கே நேரம் போதாததால், தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளில் சிலர் தங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் தங்கள் மேற் படிப்பை முடித்துக் கொண்டு, வேறு வேலைகளைத் தேர்ந் தெடுத்தனர். எல்லா சமூகத்தினருக்கும் அயல்நாட்டு மோகம் எழுந்தது. தொழில் வர்க்கம் சும்மா இருக்குமா? அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் இருந்தது. அங்கு தன் பெற்றோரைவிட பல மடங்கு ஈட்டுவதற்குரிய வாய்ப்பை உணர்ந்தனர். எனவே வெளிநாடு சென்றனர்.
பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வருவாய் தேடவேண்டும் என்ற முனைப்பு குறைந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களை அரசே தர முன் வந்தது. உணவுத் தேவையின் அடிப்படையாகவுள்ள அரிசி இலவசமாகக் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவு, புத்தகங்கள், சீருடை இலவசம்.
தொலைக் காட்சிப் பெட்டி இலவசம்; அது இயங்கும் மின்சாரம் இலவசம். வீட்டுக்கு வருகிற தொழிலாளி தொலைகாட்சி முன்னால் அமர்ந்து கொண்டு வருவாயைத் தொலைத்து விட்டு, பின்னால் தங்கிவிடுகிறான். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதர்க்கு இவைதான் கரணம்.
இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.
உழைப்பு உடல் நலத்தைத் தரும். வருவாயைத் தரும். மன மகிழ்வைத் தரும். நிம்மதியான வாழ்க்கை அமையும். நம் உயிர் காக்கும் உழைப்புக்கு உயிர் கொடுபோம்.
வாவன்னா

0 Response to "ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்?"

powered by Blogger